பெரம்பூர்: மவுலிவாக்கம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் பூபதி (35). இவர் பெரம்பூர் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ராகேஷ் ராஜா என்பவரிடம் கடந்த 2 வருடங்களாக கார் டிரைவராக வேலை செய்து வந்தார். வேலை முடிந்து இரவு நேரங்களில் அவர் ராகேஷ் ராஜா வீட்டிலேயே தங்கி வந்துள்ளார். ராகேஷ் ராஜா அதிமுக எம்ஜிஆர் மன்ற வடசென்னை மாவட்டச் செயலாளராக உள்ளார். இந்நிலையில் ராகேஷ் ராஜாவின் மற்றொரு காரை பெரம்பூர் பி.பி சாலையில் உள்ள ரபேல் என்பவரின் மெக்கானிக் ஷெட்டில் கடந்த 6 மாதமாக பூபதி விட்டிருந்தார்.
அடிக்கடி அவரிடம் கார் ரெடியாகிவிட்டதா என பூபதி கேட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 18ம் தேதி காரை எடுக்கச் சென்றபோது மெக்கானிக் ஷெட் உரிமையாளர் ரபேலுக்கும், பூபதிக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இருவரும் வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். நேற்று முன்தினம் அங்குள்ள போலீசார் இருவரையும் அழைத்து பேசினர். இருவரும் சமாதானமாக செல்வதாக கூறியதன் பேரில் அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனால் பூபதி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் பூபதியுடன் தங்கியிருந்த சரவணன் என்பவர் டிபன் வாங்க சென்றுவிட்டார். அவர் மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பூபதி வீட்டு மேற்கூரையில் உள்ள இரும்பு கம்பியில் தூக்கில் தொங்கியது தெரிய வந்தது. இதுபற்றி ஓட்டேரி போலீசருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பூபதியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழுந்த பூபதி, இறப்பதற்கு முன்பு தனது செல்போனில் தனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை எனக்கூறி வீடியோ பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் தொடர்ந்து ஓட்டேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலாளி தற்கொலை: வியாசர்பாடி சி.கல்யாணபுரம் 1வது தெருவைச் சேர்ந்தவர் தினேஷ் (41). கொருக்குப்பேட்டை கூட்ஷெட் பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு வனிதா (35) என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். தினேஷிற்கு மது பழக்கம் உள்ளதால், கணவன், மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் தினேஷ் நேற்று முன்தினம் இரவு போதையில் வீட்டிற்கு வந்து தனது மனைவி, பிள்ளைகளுடன் சண்டை போட்டு, அனைவரையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளார். சிறிது நேரத்தில் மனைவி, வீட்டுக்குள் வந்து பார்த்தபோது தினேஷ் தூக்கில் தொங்கியது தெரிந்தது. அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.