கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 43 பேர் பலியாகி உள்ளதையடுத்து, கருணாபுரம் பகுதிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், சசிகலா, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் சென்று இறந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். அப்போது தலைவர்கள் அளித்த பேட்டியில், சாராய விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீதும் அதை தடுக்காத அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், இரும்புக்கரம் கொண்டு சாராயத்தை தடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், விஷ சாராயத்தில் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளின் கல்விச் செலவை அதிமுக ஏற்கும். அவர்களின் குடும்பத்துக்கு மாதம்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். இந்த உதவித்தொகை 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார். மாநில பாஜ தலைவர் அண்ணாமலை கூறுகையில், பலியானவர்களின் குடும்பத்துக்கு பாஜ சார்பில் தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றார்.