சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் சாராயம் அருந்தியவர்களில் தற்போது வரை 42 பேர் மரணமடைந்துள்ளனர். சாராயம் அருந்தியதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் தொடர்ந்து உயிரிழப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. இந்த உயிர்ப்பலி சம்பவத்திற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்து கடுமையான நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வலியுறுத்தியும், இனியும் இதுபோன்ற சம்பவம் தமிழ்நாட்டில் நடைபெறா வண்ணம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும், அதிமுக சார்பில் வரும் 24ம் தேதி (திங்கள்கிழமை) காலை 10 மணியளவில், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.