சென்னை: சென்னை நந்தனம், ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை வளாகத்தில் உள்ள தென் சென்னை, இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஆவணங்கள் பதிவின்போது விரல்ரேகை ஒப்பீடு செய்து ஆள்மாறாட்டத்தை தடுக்கும் மேம்படுத்தப்பட்ட வசதியை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். பதிவுத்துறையில் போலி ஆவணப்பதிவை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்ட ஆவணப்பதிவு குறித்த விழிப்புணர்வு செய்தியை முன் ஆவணதாரருக்கு குறுஞ்செய்தியாக அனுப்பிடும் வசதி மற்றும் எழுதி கொடுப்பவர்/ எழுதி வாங்குபவரது விரல்ரேகை, ஆதார் மற்றும் கருவிழிப்படல தரவுகளுடன் ஒப்பிட்டு சரிபார்ப்பதன் மூலம் தவறான ஆவணப்பதிவுகள் தடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஆள்மாறட்டத்தை முற்றிலும் தவிர்க்கும்நோக்குடன் ஒரு நபர் சொத்தை விற்கும் போது தனது சொத்து விற்பனையை ஒத்துக்கொள்ளும் முகமாக சார்பதிவகத்தில் விரல் ரேகையை பதிவு செய்யும் போது இந்த சொத்து தொடர்பாக முந்தைய ஆவணப்பதிவின் போது சொத்து உரிமையாளர் நிலையில் அவரிடம் பெறப்பட்ட விரல்ரேகையுடன் ஒப்பிட்டு, இரண்டு விரல் ரேகைகளும் ஒத்திருக்கும் பட்சத்தில் மட்டுமே பதிவுக்கு ஏற்கும் வண்ணம் ஸ்டார் 2.0 மென்பொருளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பொருந்தாத நிகழ்வுகளில் சார்பதிவாளர் ஆவணப்பதிவின் உண்மை நிலையை விசாரித்து பதிவினை மேற்கொள்ளும் வண்ணம் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விரல் ரேகை ஒப்பீடு செய்து ஆள்மாறாட்டத்தை தடுக்கும் வசதி 13-2-2018க்குப் பிந்தைய ஆவணங்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்படுகிறது.