டெல்லி : பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தை ஒன்றிய இணை அமைச்சர் சாவித்திரி தாகூர் இந்தியில் பிழையுடன் எழுதியது விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. மத்திய பிரதேசத்தின் தார் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சாவித்திரி தாகூர், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர். இவர் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
இந்த நிலையில் தார் மாவட்டத்தில் அரசு சார்பில் நடத்தப்பட்ட பெண் கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற சாவித்திரி தாகூர், ஒன்றிய அரசின் ‘Beti Bachao, Beti Padhao’ எனப்படும் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தை எழுத்துப் பிழையுடன் எழுதியது விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. இதைத் தொடர்ந்து சாவித்திரி தாகூரின் கல்வி தகுதி தொடர்பான விவாதம் கிளம்பி உள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்து விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர் கே.கே.மிஸ்ரா, அரசியல் அமைப்பு சட்ட பதவிகளை வகிப்பவர்களும் பெரிய துறைகளுக்கு பொறுப்பேற்பவர்களும் தாய்மொழியில் கூட எழுத திறமை அற்றவர்கள் என்பது ஜனநாயகத்தில் துரதிஷ்ட வசமானது என்று குறிப்பிட்டுள்ளார்.