காரியாபட்டி, ஜூன் 20: காரியாபட்டி அருகே சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக பழுதடைந்து இருக்கும் பேரி கார்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரியாபட்டி தூத்துக்குடி செல்லும் நான்கு வழிச்சாலையில் விபத்துகளை தவிர்ப்பதற்காக ஆங்காங்கே காவல்துறை சார்பாக இரும்பு பேரிகார்டுகள் வைத்துள்ளனர்.
இரவு நேரங்களில் சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்கள் இந்த பேரிகார்டுகளில் மோதியதில் சேதமடைந்து கிடக்கின்றன. சாலையில் கிடக்கும் இரும்பு கம்பிகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையில் சேதமடைந்து கிடக்கும்இரும்பு பொருட்களை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.