புதுடெல்லி: போலி செய்திகள் பேரழிவை உருவாக்கும் என்று துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கவலையுடன் தெரிவித்தார்.
டெல்லியில் நடந்த இந்திய தகவல் சேவை அதிகாரி பயிற்சியாளர்கள் மாநாட்டில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பேசுகையில், ‘தகவல் என்பது மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம்;
போரின் ஐந்தாவது பரிமாணம். நம்முடைய தகவல்கள் பொதுவெளியில் சிலரால் கையாளப்படும் போது, நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. தவறான தகவல்களை தடுக்கவும், பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் நிறுவனங்களின் தனியுரிமை மற்றும் நற்பெயரைக் காப்பாற்றவும் அதிகாரிகள் விரைவாக செயல்பட வேண்டும். கட்டுப்பாடற்ற தகவல்கள், போலி செய்திகளால் அரசு நிறுவனங்களை கறைப்படுத்தவும், களங்கப்படுத்தவும், அதன் மீதான மதிப்பை குறைக்கவும், இழிவுபடுத்தவும் முடிகிறது.
கற்பனைக்கு எட்டாத பேரழிவை கூட போலி செய்திகள் உருவாக்கும். இவற்றை கட்டுப்படுத்த வேண்டும். இந்தியாவின் வளர்ச்சி குறித்த தகவல்களை உலகளவில் பரப்ப வேண்டும். உலகெங்கிலும் ‘பிராண்ட் இந்தியா’வை விளம்பரப்படுத்த வேண்டும். வளமான கலாசார பாரம்பரியம் மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நாடு என்பதை உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும். நடந்து முடிந்த தேர்தலில் தகவல் சேவை பிரிவினர் நன்றாக பணியாற்றினர்’ என்றார்.