கருணாபுரம்: கள்ளக்குறிச்சி அருகே கருணாபுரம் பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் 3 பேர் உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் சுரேஷ், பிரவீன், சேகர் ஆகியோர் உயிரிழந்தனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கள்ளச்சாரயம் குடித்ததால் 3 பேரும் உயிரிழந்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்துதான் உயிரிழந்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து விளக்கம் அளித்த மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார்; கள்ளச்சாராயத்தை ஒழிக்க மாவட்டம் முழுவதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்ததாக தவறான செய்தியை பரப்புகின்றனர். கள்ளச்சாராயத்தால் இறந்ததாக போலீசோ, மருத்துவர்களோ இன்னும் உறுதிபடுத்தவில்லை. வயிற்றுப் போக்கு, வலிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தபிறகே இந்த தகவலை கூறுகிறேன் என்று கூறினார்.