நீலகிரி: நீலகிரி வனப்பகுதியில் உள்ள கோயிலில் யானை பொம்மையை வைத்து பாரம்பரிய உடை அணிந்தபடி மேளதாளத்துடன் ஆண்கள், பெண்கள் கலாச்சார நடனமாடி கடவுளை வணங்கியது வியப்பை ஏற்படுத்தியது. மானிமூலா வனப்பகுதியில் பணியர் பழங்குடியின மக்களுக்கு காட்டுக்குரியன் என்ற குலத்தெய்வ கோயில் உள்ளது. ஆண்டுதோறும் இந்த மக்கள் வனப்பகுதியில் உள்ள அந்த கோயிலுக்கு சென்று தங்களின் பாரம்பரிய முறைப்படி கடவுளை வணங்கி வருகின்றனர்.
வனப்பகுதிக்குள் சென்று தேன் எடுத்தல், பழங்களை பறித்து விற்பனை செய்தல் போன்ற தொழில்களை நம்பியே இப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வழக்கம்போல் கோயில் திருவிழாவையொட்டி கோயிலின் முன்பாக யானை பொம்மையை வைத்து பூஜைகளை செய்த பழங்குடியின மக்கள் ஆண், பெண் என இருபாலரும் சேர்ந்து யானை பொம்மையை சுற்றி பாரம்பரிய உடை அணிந்தப்படி மேளதாளங்களுக்கு ஏற்ப கலாச்சார நடனமாடினர்.