புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடலில் மீன் பிடிப்பதற்காக நேற்றுமுன்தினம் காலை 241 விசைப்படகுகளில் மீனவர்கள் சென்றனர். கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த சிபிராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த பார்த்திபன் (32), முரளி (42), பாரதி (28), ராமதாஸ் (52) ஆகியோர் மீன் பிடிக்க சென்றனர்.
நெடுந்தீவு அருகே நேற்று அதிகாலை இவர்களின் விசைப்படகை அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், சுற்றி வளைத்து எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 4 பேரையும் கைது செய்தனர். விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து 4 மீனவர்களையும் இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.