திருச்சுழி: நரிக்குடி அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோயில் திருவிழாவில் 100 வெட்டப்பட்டு கமகம கறி விருந்து வழங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள மறையூர் கிராமத்தில் மாசாணம் சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று மாசாணம் சுவாமி கோயில் வைகாசி திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி, மறையூர் மந்தையம்மன் கோயிலில் புறப்பட்ட மாசாணம் சுவாமி, அரியசாமி மற்றும் வீரபத்திர சுவாமி, மாசாணம் சுவாமி ஆகிய சுவாமிகள் கோயிலை வந்தடைந்தன.
பின் சுவாமிக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய சுமார் 100க்கும் மேற்பட்ட ஆடுகள், சேவல்கள் மற்றும் கோழிகள் வெட்டுப்பட்டு கறி விருந்து விடிய விடிய தயாரிக்கப்பட்டது. இன்று காலை சுடச்சுட கறி விருந்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் சென்னை, மதுரை, விருதுநகர், சிவகங்கை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.