புதுடெல்லி: மாநிலங்களவையில் இருந்து மக்களவைக்கு சில எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து 10 இடங்கள் காலியாகி உள்ளன. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அசாமின் கமாக்யா பிரசாத் தசா, சர்பானந்தா சோனோவால், பீகாரின் மிசா பாரதி, விவேக் தாக்கூர், அரியானாவின் தீபேந்தர் சிங் ஹூடா, மபியின் ஜோதிராதித்யா சிந்தியா, மகாராஷ்டிராவின் உதயன்ராஜே போன்ஸ்லே, பியூஸ் கோயல், ராஜஸ்தானின் கே.சி.வேணுகோபால், திரிபுராவின் பிப்லாப் குமார் தேப் ஆகியோர் வெற்றி பெற்று எம்பிக்களாகி உள்ளனர். இவர்கள் அனைவரும் மாநிலங்களவை எம்பியாக இருந்தவர்கள். தற்போது இவர்கள் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதன் மூலம் மாநிலங்களவையில் 10 இடங்கள் காலியாகி இருப்பதாக அவை தலைமையகம் நேற்று முறைப்படி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த இடங்களுக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.