தஞ்சாவூர், ஜூன் 11: தஞ்சை மாவட்டத்தில் 10 நாட்களுக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருவதால் நீச்சலுக்காக வாத்துகள் கொண்டுவரப்பட்டுள்ளன. காவிரி டெல்டா மாவட்டங்களில் பகல் நேரங்களில் கடும் வெப்பம் நிலவி வந்தாலும் கடந்த 10 நாட்களாக மாலை வேளையில் பரவலாக மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் பலத்த மழை கொட்டுவதால் தாழ்வான பகுதிகள், வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியுள்ளன.
மேலும் பம்பு செட் வசதியுள்ள விவசாயிகள் இம்மழையை பயன்படுத்தி சாகுபடி பணிகளை வேகப்படுத்தி உள்ளனர். சாகுபடிக்கு முன்னதாக வயல்களில் தண்ணீர் பாய்ச்சும் படும் நிலையில் மேச்சலுக்காக வாத்துகள் கொண்டு வரப்படுகின்றன. பலத்த மழையால் நடவு மேற்கொள்ளாத வயல்களிலும் தண்ணீர் தேங்கியுள்ள காரணத்தால் பெரிய அளவில் வாத்துகளுக்கு இரைகள் கிடைத்து வருகிறது. இதை அறிந்த வாத்து உரிமையாளர்கள் பேராவூரணி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, பரமக்குடி போன்ற பகுதிகளில் இருந்து லாரிகளில் ஆயிரக்கணக்கான வாத்துகளை மேய்ச்சலுக்காக கொண்டு வருகின்றனர்.
தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர், அம்மாபேட்டை, கும்பகோணம், திருவையாறு போன்ற பகுதிகளில் வயல்களில் வாத்துகளுக்கு நண்டு, நத்தை மற்றும் பூச்சிகள் ஏராளமாக கிடைக்கின்றன. நல்ல இரை கிடைப்பதாலும் வாத்துகள் தற்போது ஏராளமான முட்டை இட்டு வருவதால் நல்ல வருவாய் கிடைப்பதாக வாத்து உரிமையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.