மேட்டுப்பாளையம்: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 923 மருந்தாளுநர் பணியிடங்கள் 15 நாளில் நிரப்பப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடங்கள், செவிலியர் குடியிருப்புளை நேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கு 70 சதவீதமாக இருந்த மகப்பேறு இறப்பு 45.5 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 3 மாதங்களில் 1221 மருத்துவர் காலிப்பணியிடங்கள் வெளிப்படை தன்மையுடன் நிரப்பப்பட்டுள்ளன. விரைவில் 2,553 மருத்துவர் காலிப்பணியிடங்கள் தேர்வாணையம் மூலமாக நிரப்பப்பட உள்ளன. மேலும், 923 மருந்தாளுநர் காலி பணியிடங்கள் இன்னும் 15 நாட்களில் நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
* 21 கி.மீ. ஜாக்கிங் சென்ற அமைச்சர்
மேட்டுப்பாளையம் காட்டூர் ரயில்வே கேட் அருகில் இருந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று காலை ஜாக்கிங் சென்றார். பின்னர், அங்கிருந்து வனபத்ரகாளியம்மன் கோவில், தேக்கம்பட்டி, தேவனாபுரம்,மேடூர், சாலை வேம்பு, கண்டியூர், வெள்ளியங்காடு வழியாக தோலம்பாளையம் சென்றார். மொத்தம் 21 கிமீ ஜாக்கிங் சென்றார். அப்போது, அப்பகுதி அவ்வழியாக உள்ள கிராமங்களின் நிலை, சுகாதாரம் குறித்து ஆய்வு செய்தபடியே சென்றார். அமைச்சர் தங்களது கிராமப்பகுதிகளில் ஜாக்கிங் சென்றதைக் கண்ட அப்பகுதி மக்கள் வியப்படைந்தனர். அப்போது, அவ்வழியாக சென்ற கராத்தே பயிலும் மாணவர்கள் அமைச்சருடன் ஜாக்கிங் சென்றபடியே புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.