சாத்தூர், ஜூன் 8: சாத்தூர் அருகே தகர ஷெட்டில், அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.65 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. சாத்தூர் அருகே முத்தால்நாயக்கன்பட்டி பகுதியில், சாத்தூர் நகர் எஸ்.ஐ அருண்குமார் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். பிள்ளையார்கோவில் தெருவிலுள்ள வீரபாண்டி (49) என்பவருக்கு சொந்தமான தகர ஷெட்டில் சோதனை செய்த போது, அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அனுமதியின்றி பட்டாசு தயாரித்த முத்தால்நாயக்கன்பட்டியை சேர்ந்த வீரபாண்டி, சேர்மத்தாய் (40), சிவகாசி சுப்பிரமணியபுரம் காலனியை சேர்ந்த ராஜகனி (48) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதுபோன்று, சித்தப்பள்ளி பகுதியில் ரோந்து சென்ற நகர் எஸ்.ஐ கேசவன் தலைமையிலான போலீசார், தகர ஷெட்டில் பட்டாசு தயாரித்த வரலட்சுமி (35), சீனிவாசன் (42) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.65 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.