டெல்லி : நீங்கள் இருவரும் உங்கள் கூட்டாளியான நரேந்திர மோடியைப் போல் இல்லாமல் மதச்சார்பற்ற தலைவர்கள் என்று நம்புவதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் இம்முறை பாஜவுக்கு தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்கள் கிடைக்கவில்லை. இதனால் கூட்டணி ஆட்சி அமைய வேண்டுமென்றால், 16 எம்பிக்களை வைத்துள்ள தெலுங்கு தேசம் மற்றும் 12 எம்பிக்களை வைத்துள்ள ஐக்கிய ஜனதா தளத்தின் ஆதரவு பாஜவுக்கு அவசியமாகி உள்ளது. இதன் காரணமாக, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபும், ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமாரும் கிங் மேக்கர்களாகி உள்ளனர். ஆகவே அவர்கள் பாஜ அரசுக்கு ஆதரவளிக்க இப்போதே பல்வேறு நிபந்தனைகள் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.குறிப்பாக, இருகட்சிகளுமே மக்களவை சபாநாயகர் பதவி தங்களுக்கு வேண்டும் என்ற விருப்பத்தை பாஜவிடம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. இதைத் தவிர ரயில்வே உள்ளிட்ட முக்கிய அமைச்சர் பதவியை தங்களுக்கு தர வேண்டுமென இரு கட்சிகள் கேட்டுள்ளன.
இது தொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜ் தனது சமூகவலைத்தள பக்கத்தில், “சந்திர பாபு நாயுடு, பவன் கல்யாண் அவர்களே, உங்கள் வரலாற்று வெற்றிக்கு வாழ்த்துக்கள். உங்கள் இருவரையும் எனக்கு தனிப்பட்ட முறையில் சில காலமாகத் தெரியும், நீங்கள் இருவரும் உங்கள் கூட்டாளியான நரேந்திர மோடியைப் போல் இல்லாமல் மதச்சார்பற்ற தலைவர்கள் என்று நம்புகிறேன்.ஆந்திரப் பிரதேசத்திற்கு மிகவும் தேவையான நீதியை உறுதி செய்யும் பொறுப்பு மட்டும் உங்களுக்கு இல்லை.. நமது தேசத்தை பாதித்துள்ள வகுப்புவாத அரசியலுக்கு எதிராக குரல் கொடுக்கும் பொறுப்பும் உங்களுக்கு உள்ளது. உங்கள் இருவரையும் நான் அறிவேன், நீங்கள் எங்களை வீழ்த்த மாட்டீர்கள் என்று நம்புகிறேன்,”இவ்வாறுத் தெரிவித்துள்ளார்.