வருசநாடு, ஜூன் 7: கடமலை- மயிலை ஒன்றிய கிராமங்களில் மூல வைகையாறு கழிவுநீர், குப்பை- பிளாஸ்டிக் கழிவுகளால் மாசடைந்து வருகிறது. கடமலை, மயிலை ஒன்றியத்தில் கண்டமனூர், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, சிங்கராஜபுரம் உள்பட பல கிராமங்கள் மூல வைகை ஆற்றின் கரைகளில் அமைந்துள்ளன. இப்பகுதிகளில் வசிக்கும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை வைகை ஆற்றில் கலக்க விடுவதோடு, குப்பை, பிளாஸ்டிக் கழிவுகளையும் கொட்டி குவித்து வருகின்றனர்.
இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் பொதுமக்களுக்கு தொற்று ேநாய் பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் கருப்பையா கூறியதாவது: கடமலை- மயிலை ஒன்றியத்தில் மூல வைகை ஆறு கழிவுநீராலும், குப்பை- பிளாஸ்டிக் கழிவுகளாலும் மாசமடைந்து வருகிறது.
வருசநாடு மூல வைகை ஆற்றங்கரையோரம் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இங்கு மது வாங்குபவர்கள் குடித்து விட்டு பிளாஸ்டிக் கழிவுகளை ஆற்றிற்குள்ளேயே வீசி செல்லும் அவல நிலை உள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் தென்மாவட்டங்களின் குடிநீர், பாசன ஆதாரமான மூல வைகையாறு மாசடைவதை தடுக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.