இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பல இடங்களில் வெள்ளம் மக்களையும் வீடுகளையும் அடித்துச் சென்றது. இதில், 300 பேர் உயிரிழந்தனர். சீசன் தவறி பெய்த மழையால், நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமான யுனிசெப் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், மோசமான வானிலையால் பருவநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வெள்ளம், வறட்சி ஏற்படுகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் கடந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவியது. இந்த வெள்ளம் காரணமாக பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச சமுதாயம் உதவ வேண்டும் என்று ஆப்கானிஸ்தானுக்கான யுனிசெப் பிரதிநிதி தாஜூதின் ஒய்வாலே தெரிவித்தார்.