சென்னை: தி.நகரில் உள்ள திமுக எம்பி டி.ஆர்.பாலு வீட்டை நோட்டமிட்டதாக 7 வாகனங்களை தகவல் தொழில்நுட்ப பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் திமுக எம்பியாக இருப்பவர் டி.ஆர்.பாலு. இவர், தற்போது டெல்லியில் உள்ளார். இந்நிலையில் சென்னை தி.நகரில் உள்ள திமுக எம்பி டி.ஆர்.பாலு வீட்டை 7 வாகனங்கள் நோட்டமிட்டதாக வந்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த வாகனங்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தி.நகரில் டி.ஆர்.பாலு வீட்டை 7 வாகனங்கள் 360 டிகிரி ஆங்கிளில் வீடியோ எடுத்து நோட்டமிட்டது தெரியவந்தது.
டெக் மகிந்திரா நிறுவன ஊழியர்கள் அந்த வாகனங்களில் இருந்தனர். அவர்களை விசாரித்த போது டெக் மகிந்திராவும், ஆப்பிள் நிறுவனமும் இணைந்து மேப்பை அப்டேட் செய்வதற்காக சென்னையில் பல்வேறு இடங்களை வீடியோ எடுத்ததாக கூறினர். ஆப்பிள் மேப் மற்றும் ஸ்ட்ரீட் வியூ அப்டேட்டுக்காக வீடியோ எடுத்ததாக கூறினர். இதுகுறித்து தகவல் தொழில்நுட்ப துறை பிரிவு போலீசார் டெக் மகிந்திரா ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சென்னையில் அவர்கள் 360 டிகிரி கேமரா மூலம் எத்தனை இடங்களை எந்தெந்த கோணத்தில் வீடியோ எடுத்துள்ளனர் என்பதையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.