கரூர்: கரூர் வடக்கு காந்தி கிராமத்தை சேர்ந்தவர் லதா. இவர் திருச்சி மாவட்டம் தா.பேட்டை போலீஸ் நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சூர்யா(23). இன்ஜினியரிங் பட்டதாரி.
நேற்று முன்தினம் கரூர் மாரியம்மன் கோயிலில் கம்பம் ஆற்றில் விடும் விழா நடைபெற்றது. இதில் சூர்யா, அவரது நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த ரங்கன்(23), ரபிநாத்(23), சஞ்சய்குமார்(24) ஆகிய 3 பேருடன் கலந்துகொண்டார். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை ராமானூர் பகுதியில் நிறுத்தி வைத்திருந்தனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை போலீஸ்காரர் சரவணன் கூட்டம் அதிகமாக இருப்பதால் மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்துமாறு 4 பேரிடமும் கூறியுள்ளார். இதனால் சரவணனுக்கும், சூர்யா உள்பட 4 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த சூர்யா உள்பட 4 பேரும் சேர்ந்து போலீஸ்காரர் சரவணனை சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து சரவணன் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து சூர்யா உள்பட 4பேரையும் கைது செய்து கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.