திருச்சி, மே 31: திருச்சியில் மகளின் கையை கடித்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கருணாநிதி(48). இவரது 13 வயது மகள், தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். மது போதைக்கு அடிமையான கருணாநிதி, தினந்தோறும் குடித்து விட்டு வந்து மனைவி, மகளிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த மாதம் 25ம் தேதி மது போதையில் வீட்டுக்கு வந்து வழக்கம் போல் மனைவி, மகளிடம் தகராறு செய்தார்.
மேலும் கத்தியை காட்டி மிரட்டி மகள் கையை கடித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கடந்த 10ம் தேதி திருச்சியில் உள்ள குழந்தைகள் நலவாரியத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் செய்தார். இதைத் தொடர்ந்து, தில்லைநகர் போலீசார் கருணாநிதியை கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.