டெல்லி: இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக்கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரியும், ஜாமீன் வழங்கக் கோரியும் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஜூன் 1க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான ஊழல் வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதனுடன், உடல்நிலையை காரணம் காட்டி ஏழு நாட்கள் இடைக்கால ஜாமீன் கோரியும் மனு தாக்கல் செய்துள்ளார்.
கெஜ்ரிவாலின் மனுவை விசாரித்த ரோஸ் அவென்யூ நீதிமன்றம், இந்த வழக்கில் பதில் அளிக்க அமலாக்க இயக்குனரகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இடைக்கால மற்றும் வழக்கமான ஜாமீன் வழக்குகளில் அமலாக்கத்துறை பதில்களைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான ஏஎஸ்ஜி எஸ்வி ராஜு, “அவர் காவலில் இல்லை. உச்சநீதிமன்றத்தில் அவருக்கு இடைக்கால ஜாமீன் கிடைத்துள்ளது. அவர் இன்று பஞ்சாபில் பிரசாரம் செய்கிறார். அவரது உடல்நிலை அவரை பிரச்சாரத்தில் இருந்து தடுக்கவில்லை. எங்களுக்கு மிகக் குறைவான கால அவகாசம் கிடைக்கும் என்பதற்காக கடைசி தேதியில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அவருடைய நடத்தையால் அவருக்கு எந்த நிவாரணமும் கிடைக்கக்கூடாது” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை நாளை மறுநாள் (ஜூன் 1, 2024) மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ளது. முன்னதாக நேற்று (மே 29, 2024), கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரிய மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.