புதுடெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை விவகாரத்தில் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் 21ம் தேதி கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்ற உத்தரவுபடி வரும் ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீனில் உள்ளார். இந்த நிலையில் மருத்துவ பரிசோதனை செய்வதற்காக இடைக்கால ஜாமீனை மேலும் ஒரு வாரம் நீடிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு செய்துள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க விடுமுறைகால பெஞ்ச் நேற்று முன்தினம் மறுத்தது.
இதையடுத்து, மேற்கண்ட விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் பதிவாளர் மகேஷ் தனஞ்ஜிராவ் பதன்கர் முன்னிலையில் ஆஜரான அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி மனுவை அவசர வழக்காக பட்டியலிட வேண்டினார். அரவிந்த் கெஜ்ரிவாலின் கோரிக்கையை நிராகரிப்பதாக தெரிவித்த உச்ச நீதிமன்ற பதிவாளர்,‘‘மனுவை அவசர வழக்காக கண்டிப்பாக பட்டியலிட முடியாது. அவசர கால நிவாரணம் தேவையென்றால், விசாரணை நீதிமன்றத்தை அணுகி தகுதியின் அடிப்படையில் ஜாமீன் மனு தாக்கல் செய்து நிவாரணம் கேட்டு பெற்றுக்கொள்ளலாம் என்று கூறினார்.