குளத்தூர், மே 28: குளத்தூர் அருகே 560 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து அரிசி மூட்டைகள் மற்றும் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. குளத்தூர் எஸ்ஐ முத்துராஜா மற்றும் போலீசார், கொல்லம்பரம்பு கிராம பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும் வகையில் பைக்கில் மூட்டைகளோடு வந்த குளத்தூர் கிழக்கு தெருவை சேர்ந்த பெருமாள் மகன் மதன்(20), பசுவந்தனை கிழக்கு தெருவை சேர்ந்த மாரிமுத்து மகன் கலைமுனியசாமி(19), தூத்துக்குடி கேவிகே நகரை சேர்ந்த அந்தோணி மகன் சிவா(21) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள், ரேஷன் அரிசிகளை மூட்டைகளில் கட்டி கடத்துவது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார், இவர்களிடம் இருந்து தலா 40 கிலோ எடை கொண்ட 14 மூட்டை ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 பைக்குகளை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.