காரியாபட்டி, மே 28: காரியாபட்டி அருகே குண்டும், குழியுமாக உள்ள கழுவனச்சேரி கண்மாய் கரையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ளது கழுவனச்சேரி கிராமம். இங்கு 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கழுவனச்சேரி கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
மாணவர்கள் பள்ளி சென்று வர வசதியாக கண்மாய் கரையில், கடந்த 6 மாதத்திற்கு முன் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. சாலை அமைக்கப்பட்ட ஒரிரு மாதங்களிலேயே சாலை சேதமடைந்துள்ளது. ஜல்லி கற்கள் பரவி கிடப்பதால் மாணவர்களும், இச்சாலையை பயன்படுத்தும் பொதுமக்களும் சிரமம் அடைந்து வருகின்றனர். போக்குவரத்திற்கு லாயக்கற்ற இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.