சேலம், மே 26: சேலம் மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள கற்களை எந்தவித அனுமதியும் இன்றி வெட்டி கடத்துவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து மாவட்டம் முழுவதும் வருவாய்த்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே காரிப்பட்டி பகுதியில் கற்கள் கடத்தப்படுவதாaக, வாழப்பாடி வருவாய்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.இதனையடுத்து வாழப்பாடி தாசில்தார் ஜெயந்தி, நேற்று முன்தினம் காரிப்பட்டி அடுத்த ராமலிங்கபுரம் பகுதியில் ஆய்வில் ஈடுபட்டார்.
அப்போது, மர்மநபர்கள் 2 பேர், அங்குள்ள கற்களை எந்தவித முன் அனுமதியும் இன்றி வெட்டி லாரிகளில் எடுத்துச் செல்வதை கண்டறிந்தார். இதுகுறித்து காரிப்பட்டி போலீசில் புகார் அளித்தார்.இதன்பேரில் விசாரணை நடத்தியதில், கற்களை கடத்தியது சின்னக்கவுண்டாபுரம் ஒட்டப்பட்டி ஏரிக்காடு பகுதியைச் சேர்ந்த குமார் (48) மற்றும் மனோஜ் (28) என்பது தெரியவந்தது. இதனையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் லாரி மற்றும் கற்களை பறிமுதல் செய்தனர்.