புனே: சொகுசு கார் விபத்தில் 2 பேர் பலியானார்கள். கடும் விமர்சனம் எதிரொலியாக சிறுவனுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 17 வயது சிறுவன் குடிபோதையில் சொகுசு காரை அதிவேகமாக ஓட்டியபோது, பைக் மீது மோதியதில் 2 ஐ.டி ஊழியர்களான அனில் அவதியா மற்றும் அவரது தோழி அஷ்வினி கோஷ்தா ஆகியோர் உயிரிழந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவன், குடிபோதையில் கார் ஓட்டியது தெரிய வந்ததால் அவனை கைது செய்தனர். பின்னர் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். அவனுக்கு உடனடியாக நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மேலும், சாலை விபத்து குறித்து 300 வார்த்தைகள் கொண்ட கட்டுரை எழுத உத்தரவிட்டது.
இந்த கார் விபத்து தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. பதை பதைக்க வைக்கும் இந்த கோர விபத்தில் சிறுவனுக்கு உடனடியாகவும், எளிதாகவும் ஜாமீன் வழங்கப்பட்டது, பலதரப்பினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதனால் ஜாமினை சிறார் நீதிமன்றம் ரத்து செய்து சிறார் காண்காணிப்பு மையத்தில் ஜூன் 5ம் தேதி வரை அடைக்க உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்யுமாறும், குற்றம் கொடூரமானதால் குற்றம் சாட்டப்பட்ட இளைஞனை வயது வந்தவராக கருதுவதற்கும் அனுமதி கோரி போலீசார் மீண்டும் வாரியத்தை அணுகினர். இதையடுத்து சிறுவனின் ஜாமின் ரத்து செய்யப்பட்டுள்ளது. விபத்தை ஏற்படுத்திய 17 வயது சிறுவன், 25 வயது வரை வாகனம் ஓட்ட கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மகாராஷ்டிரா போக்குவரத்து ஆணையர் விவேக் பிமான்வார் பிறப்பித்துள்ளார்.
அந்த சிறுவன் ஓட்டி வந்த சொகுசு காருக்கான நிரந்தர வாகன பதிவு கடந்த மார்ச் மாதம் முதல் நிலுவையில் உள்ளதாகவும், அதற்கான பதிவு கட்டணம் ரூ.1,758 உரிமையாளர் தரப்பில் செலுத்தப்படவில்லை என்றும் மாநில போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கியது, 150 கிலோ மீட்டர் வேகம், தற்காலிக வாகன பதிவு உள்ளிட்டவை பல விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இந்த சொகுசு காரை அடுத்த 12 மாதங்களுக்கு எந்தவொரு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் பதிவு செய்ய முடியாது. விபத்து ஏற்படுத்திய 17 வயது சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.