பேரணாம்பட்டு, மே 22: பேரணாம்பட்டு அருகே விவசாய நிலங்களில் காட்டு யானைகள் புகுந்து வாழை, தென்னை மரங்கள் சேதம் செய்தது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த குண்டலபல்லி, ரங்காம்பேட்டை, அரவாட்லா, பாஸ்மர்பெண்டா உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு வன விலங்குகள் அவ்வப்போது தண்ணீர் மற்றும் உணவுகள் தேடி குடியிருப்புக்குள் வருவது தொடர்கதையாகி உள்ளது. அதன்படி, நேற்று பேரணாம்பட்டு அடுத்த ரங்காம்பேட்டை கிராமத்தில் நேற்று அதிகாலை 4 மணியளவில் காட்டு யானைகள் கூட்டமாக புகுந்து சிகாமணி என்பவரின் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த 10 தென்னை மரங்களை உடைத்து சேதப்படுத்தியது. அதேபோல் சாரங்கல் கிராமத்தை சேர்ந்த வாசு என்பவரின் நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளையும் மீறி மற்றொரு யானைகள் கூட்டம் புகுந்து அங்கு அறுவடைக்கு தயாராக இருந்த 20க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சாய்த்து தார்களை சாப்பிட்டு அட்டகாசம் செய்தது. இதனை கண்ட விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் வந்து சேதமான விவசாய நிலங்களை பார்வையிட்டு கணக்கீடு செய்தனர். தொடர்ந்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதாக உறுதியளித்தனர்.