சேலம்: மலைகளின் அரசன் என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் 47வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி இன்று (22ம் தேதி) தொடங்குகிறது. 26ம் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. ஏற்காட்டில் இன்று பகல் 12 மணிக்கு நடக்கும் தொடக்க நிகழ்ச்சியில், வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலாத்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு, மலர்கண்காட்சியை தொடங்கி வைக்கின்றனர். கண்காட்சியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூந்தொட்டிகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
அத்துடன் 7 லட்சத்திற்கும் அதிகமான மலர்களை கொண்டு கண்கவர் வடிவமைப்புகள் காட்சிப்படுத்தப்படவுள்ளது. மலையேற்ற பயிற்சி, படகு போட்டி, அடுப்பில்லா சமையல் போட்டி, விளையாட்டு போட்டிகள், நாய்கள் கண்காட்சி, குழந்தைகளின் தளிர் நடை போட்டி உள்பட பல்வகை போட்டிகள் நடத்தப்படுகிறது. ஏற்காடு கோடை விழாவையொட்டி இன்று முதல் 26ம் தேதி வரை காலை 8.30 மணிக்கு சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பேக்கேஜ் பஸ் புறப்பட்டு ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலாதலமான கரடியூர் காட்சி முனை,
சேர்வராயன் கோயில், மஞ்சகுட்டை காட்சி முனை, பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ்சீட், ரோஸ்கார்டன், ஏற்காடு ஏரி, அண்ணா பூங்கா, மான் பூங்கா, தாவரவியல் தோட்டம் ஆகிய இடங்களை கண்டு களித்து மீண்டும் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு இரவு 7 மணிக்கு பேக்கேஜ் நிறைவு செய்யும் வகையில் சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சிறப்பு பஸ்சுக்கு ஒரு பயணிக்கு ரூ.300 கட்டணம்.