திருவனந்தபுரம்: கேரளாவில் வெஸ்ட் நைல் காய்ச்சலுக்கு வாலிபரும் ,அமீபா மூளை காய்ச்சலுக்கு சிறுமியும் பலியாயினர்.கேரள மாநிலம் மலப்புரம் மணியூர் பகுதியை சேர்ந்தவர் அசன்குட்டி. அவரது மகள் பத்வா (5). கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமிக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டது. பரிசோதனையில் சிறுமிக்கு அமீபிக் மெனிஞ்சோ என்சபலைட்டிஸ் (அமீபா மூளைக்காய்ச்சல்) என்ற நோய் பரவியிருந்தது தெரியவந்தது.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிறுமி பத்வா நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே வெஸ்ட் நைல் காய்ச்சல் பாதித்து இடுக்கியை சேர்ந்த வாலிபர் இறந்துள்ளார். இடுக்கி மாவட்டம் மணியாரன்குடி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (24). சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அறுவை சிகிச்சை முடிந்த பிறகு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது.
பரிசோதனையில் அவருக்கு வெஸ்ட்நைல் காய்ச்சல் பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காய்ச்சல் குணமானதை தொடர்ந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் மீண்டும் காய்ச்சல் வந்ததை தொடர்ந்து இடுக்கி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் விஜயகுமார் மரணமடைந்தார். மரணத்திற்கு வெஸ்ட்நைல் காய்ச்சல் தான் காரணம் என்று கேரள சுகாதாரத்துறையும் உறுதி செய்து உள்ளது.