தர்மபுரி,மே 21: பாலக்கோட்டில் அரசு தடை செய்த புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பாலக்கோட்டில் போலீஸ் டிஎஸ்பி சிந்து மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் உத்தரவுப்படி, எஸ்ஐகள் மற்றும் போலீசார் ரோந்து பணி மற்றும் கடைகளில் ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று பாலக்கோடு பேருந்து நிலைய பகுதியில், எஸ்ஐ முனிராஜ் ஆய்வு செய்தபோது, ஒரு பீடா கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தார். பின்னர், மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா, இந்த கடை இயங்க தடை விதித்து நோட்டீசை வழங்கினார். மேலும், உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் காவல்துறையுடன் இணைந்து ஆய்வு செய்த போது, கடமடை ரயில்வே கேட் பகுதியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு எதிரில், ஒரு மளிகை கடையில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர். அந்த கடையை மூடி மறு உத்தரவு வரும் வரை திறக்க கூடாது என எச்சரித்து சீல் வைத்தனர். இந்த 2 கடைகளுக்கும் தலா ₹25 ஆயிரம் அபராதம் விதித்தனர். அப்போது, பாலக்கோடு போலீஸ் எஸ்எஸ்ஐ ராஜேந்திரன் மற்றும் போலீசார் வேலு, முத்துராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.