சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் அமோக ஆதரவோடு வெற்றி பெற்றதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். நீண்ட நெடுங்காலமாக மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க சமூக நோக்கத்துடன் எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் பல்வேறு வழக்குகளில் வாதாடியவர். காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினராக, ஒன்றிய அமைச்சராக மிகச் சிறப்பாக பணியாற்றியவர். மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கிற போராளியான கபில்சிபலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.