மதுரை: மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சூலபுரம் கிராமத்தில் கீழடியைப் போல தொல்லியல் பொருட்கள் அதிகளவு கிடைத்து வருகின்றன. சூலபுரத்தில் தனியார் தோட்டத்தில் அண்மையில் பள்ளம் தோண்டியபோது பழமையான 1,500 சூதுபவளமணிகள் கிடைத்தன. அவற்றை ஆய்வு செய்ததில் சுமார் 2,500 ஆண்டுகள் பழமையானது எனத் தெரிந்தது. மதுரை, விருதுநகர் கல்லூரி மாணவிகளால் இப்பொருட்கள் தூய்மைப்படுத்தப்பட்டு மாலைகளாக கோர்க்கப்பட்டன. உலக அருங்காட்சியக தினத்தையொட்டி மதுரை அரசு அருங்காட்சியகத்தில் இம்மாலைகள் நேற்று துவங்கி, வரும் 31ம் தேதி வரை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள், மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டு செல்கின்றனர். அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் மருதுபாண்டியன் கூறுகையில், சூலபுரத்தில் கண்டறியப்பட்டுள்ள சூதுபவள மணிகள் சால்செடோனியின் வகையாகும். மலை, கூழாங்கல்லின் மூலப்பொருள் கொண்டிருக்கிறது. என்றார்.