காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுகவின் அவசர செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 20ம்தேதி மாலை 4 மணியளவில் குன்றத்தூர் செங்குந்தர் திருமணமண்டப வளாகத்தில் உள்ள அண்ணா அரங்கில் நடைபெறுகிறது. மாவட்ட அவை தலைவர் த.துரைசாமி தலைமை தாங்குகிறார். மாவட்ட துணை செயலாளர்கள் இ.கருணாநிதி எம்எல்ஏ, வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ, து.மூர்த்தி மற்றும் மாவட்ட பொருளாளர் வெ.விசுவநாதன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
கூட்டத்தில், கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கட்சி வளர்ச்சி பணி குறித்து விவாதிக்கப்படுகிறது. முன்னதாக, அமைச்சர் தா.மோ.அன்பரசன் அனைவரையும் வரவேற்று தீர்மானம் குறித்து பேசுகிறார். கூட்டத்தில், திமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், அணிகளின் மாநில நிர்வாகிகள், மாவட்ட அமைப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளர்கள் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.’