கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலை மலைக்கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுத்தீ, கடந்த 4 தினங்களாக எரிந்து வந்தது. இதனால் சுமார் 500 ஏக்கர் வனப்பரப்பில் இருந்த மரங்கள், தாவரங்கள், மூலிகை செடிகள் தீயில் எரிந்து நாசமாகின. காட்டுத்தீ காரணமாக அங்குள்ள மின்கம்பங்கள், அதன் வழியாக செல்லும் வயர்கள் சேதம் அடைந்து மின்சார வினியோகமும் தடைபட்டது.
வனத்துறையினர் தொடர்ச்சியாக போராடி காட்டுத்தீயை நேற்று கட்டுக்குள் கொண்டு வந்தனர். தற்போது காட்டுத்தீ கட்டுக்குள் வந்ததையடுத்து, மின்வாரிய துறையினர் சேதமடைந்த மின் கம்பங்கள், மின் வயர்களை போர்க்கால அடிப்படையில் சரி செய்து, மின் விநியோகம் தடையின்றி கிடைக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர்.