சென்னை: தமிழக பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் கடந்த 2018ல் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவிட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உட்பட திமுக நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில், ஈரோடு டவுன் போலீசார், எச்.ராஜா மீது பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல், பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் செயல்படுதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இந்த வழக்கு எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகள் விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை 3 மாதங்களில் முடிக்குமாறு சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்துச் செய்யக்கோரி மீண்டும் எச்.ராஜா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வநத்து. அப்போது, நீதிபதி, இந்த பதிவை பதிவிட்டது நீங்களா என்று ராஜா தரப்பிடம் கேட்டார். அதற்கு எச்.ராஜா தரப்பில் ஆம் என்று பதிலளிக்கபட்டது. இதையடுத்து, எச்.ராஜாவிற்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதி, விசாரணையை சந்திக்க அறிவுறுத்தி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.