கூடலூர்: முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு மற்றும் அபயாரன்யம் முகாம்களில் தற்போது 28 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. வனப்பகுதியில் இருந்து தாயை பிரிந்து வரும் குட்டி யானைகளுக்கு இங்கு சிறப்பு பராமரிப்பு அளிக்கப்பட்டு அவை பாதுகாக்கப்படுகின்றன. தெப்பக்காடு யானைகள் முகாமில் கடந்த 2 மாதங்களுக்குள் 2 குட்டி யானைகள் தாயை பிரிந்த நிலையில் கொண்டு வந்து சேர்க்கப்பட்டன.
கடந்த பிப்ரவரி மாதத்தில் சத்தியமங்கலம் வனப்பகுதியில் தாயை பிரிந்த 3 மாத பெண் குட்டி யானை முதுமலைக்கு கொண்டு வரப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கடந்த மாதத்தில் கோவை வனச்சரகம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தாயை பிரிந்த 4 மாத ஆண் குட்டியானை முதுமலைக்கு பராமரிப்பிற்காக கொண்டு வரப்பட்டது.
இந்த இரு குட்டி யானைகளுக்கும் ஒரு பாகன் மற்றும் தலா 2 உதவியாளர் நியமிக்கப்பட்டு பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட குட்டி யானை நேற்று குழந்தையை போல் உறங்கி ஓய்வெடுத்து கொண்டு இருந்தது. இந்த காட்சி முகாமில் உள்ளவர்களை பரவசப்படுத்தியது.