க.பரமத்தி, ஏப். 20: தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கூறினார். அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி உட்பட்ட பெரிய திருமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் தனது வாக்கை காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜோதிமணி, இந்தியா கூட்டணி 40 நாடாளுமன்ற தொகுதியிலும் மகதான வெற்றி பெறும். இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமர் ஆவார். தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிற மு.க.ஸ்டாலின் தமிழர்களின் உணர்வுகளும், உரிமைகளும் மீட்கப்பட வேண்டும், வளர்ச்சி பாதை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். இந்த தேர்தலில் செல்லுமிடமெல்லாம் தனக்கு மகத்தான வரவேற்பை வழங்கியுள்ளனர். அது வாக்குகளாக மாறி வெற்றியை வழங்கும். இவ்வாறு காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கூறினார்.