பாஜ ஆட்சியின் முடிவுக்கான ‘கவுன்ட் டவுன்’ ஆரம்பம் ஆகிவிட்டது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று தனது சமூக வளைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: புகழ்பெற்ற @LoknitiCSDS ஆய்வு அமைப்பு, 2024 மக்களவை தேர்தலில் முக்கிய பிரச்னைகள் எவை என மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. அதில், 27 சதவீதம் பேர் வேலைவாய்ப்பு இல்லாமைதான் முக்கியப் பிரச்னை என்றும், 23 சதவீதம் பேர் விலைவாசி உயர்வு என்றும், 55 சதவீதம் பேர் கடந்த 5 ஆண்டு பாஜ ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாகவும், ஏழை மக்களில் 76 சதவீதம் பேர் விலைவாசி உயர்வே இத்தேர்தலில் முக்கியப் பிரச்னை என்றும் கூறியுள்ளனர். இதில் இருந்தே இந்த பாஜ ஆட்சியின் முடிவுக்கான ‘‘கவுன்ட்டவுன்’’ ஆரம்பம் ஆகிவிட்டது. அதிகரித்துவிட்ட ஊழல், கார்ப்பரேட்டுகளிடமே மீண்டும் மீண்டும் குவியும் செல்வம், தொடரும் பாகுபாடுகள் என மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்னைகளை தீர்ப்பதில், பத்தாண்டுகால பாஜ ஆட்சி படுதோல்வி அடைந்து விட்டதை மக்கள் உணர தொடங்கி விட்டார்கள். ‘சிலரைச் சில காலம் ஏமாற்றலாம்; எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.