தமிழர்கள் மட்டுமல்ல, தென் மாநிலங்களில் உள்ள மக்கள் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களிடம் நெருங்கிப் பழகுவதில்லை. அதேபோல, வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களும் தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்களை கண்டுகொள்வதில்லை. இது இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாக உள்ள சூழ்நிலைதான். இதனால்தான் அப்போதே சொன்னார் அண்ணா, வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று. இன்றும் அதேநிலைதான் தற்போது உள்ளது. ஆனால் தெற்கில் உள்ள மாநிலங்களுக்கு நிதி ஒதுக்காவிட்டாலும் கிடைத்த நிதியை பயன்படுத்தி, வடமாநிலங்களைக் காட்டிலும் பல மடங்கு முன்னேற்றத்தை தமிழகம் கண்டு வருகிறது.
இதனால் வடமாநில தலைவர்களையும், கட்சிகளையும் நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அவர்களைக் கூட மனதில் வைப்பதில்லை. குறிப்பாக, ஒரு ஒன்றிய அமைச்சரையோ, அவரது பெயரையோ தமிழர்களுக்கு தெரியாத நிலைதான் தற்போது உள்ளது. தேர்தல் முடிந்த பிறகு அவர்களும் தமிழகம் பக்கம் திரும்பிக் கூட பார்ப்பதில்லை. தேர்தல் நேரத்தில்தான் எட்டிப் பார்ப்பார்கள். அப்படித்தான் பல முறை அமித்ஷாவைக் கூட தமிழக பாஜவினருக்கு தெரியாத நிலைதான் தற்போது உள்ளது. அதில் வடமாநில கட்சியாக பார்க்கப்படும் பாஜவின் தேசிய தலைவர்களில் ஒருவராகவும், ஒன்றிய உள்துறை அமைச்சராகவும் இருக்கும் அமித்ஷாவும், தமிழக திரைப்பட இயக்குநரும், நடிகருமான சந்தானபாரதியும் ஏறத்தாழ ஒரே முகபாவனையைக் கொண்டவர்கள். இதனால் சில மாதங்களுக்கு முன்னர் பாஜவினர் அமித்ஷா படத்திற்கு பதிலாக சந்தான பாரதியின் படத்தைப் போட்டு விளம்பரம் செய்து வந்தனர்.
இதுகுறித்து சந்தானபாரதியே பல இடங்களில் பேட்டி கொடுத்துள்ளதோடு, பாஜவினரை கிண்டலடித்து வந்தார். இந்நிலையில், உள்துறை அமைச்சரும், பாஜவை இயக்கி வருபவருமான அமித்ஷா நேற்று மதுரை வந்தார். அதோடு, சிவகங்கை, தென்காசிக்கும் அவர் வருவதாக இருந்தது. அந்த இரு பயணங்களை மட்டும் அவர் ரத்து செய்து விட்டார். மதுரைக்கு மட்டும் அமித்ஷா வந்தார். அவரது வருகையையொட்டி மதுரை மற்றும் தென்காசியில் பாஜவினர் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். அதில், அமித்ஷா படத்திற்கு பதில் சந்தானபாரதியின் படத்தைப் போட்டு, அமித்ஷாவை வரவேற்று போஸ்டர் அடித்து நகரெங்கும் ஒட்டியுள்ளனர். இதைப் பார்த்த பொதுமக்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவா, சந்தானபாரதியா என்று கிண்டல் அடித்ததோடு, இது கூட தெரியாமல் நிர்வாகிகள் உள்ளனர். இவர்கள் எப்படி நாளை நாட்டை காப்பாற்றப்போகிறார்கள் என்று முணுமுணுத்தனர்.