ஐபிஎல் போட்டியின் கடந்த மார்ச் 31ம் தேதி ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை சென்னை அணி எதிர்கொண்டது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், டெல்லி அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. பின்னர், சென்னை அணிக்கு 191 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய சென்னை அணி ஆரம்பத்திலேயே கொஞ்சம் தடுமாற, தொடர்ந்து வந்த ஒரு சில ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதையடுத்து, ‘தல’ தோனி களமிறங்கினார். கிட்டத்தட்ட 300+ நாட்களுக்கு பிறகு அனைவருக்கும் தல தரிசனம் கிடைத்ததால் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். போட்டியில் வெற்றிபெறவில்லை என்றாலும் தோனியை களத்தில் கண்டது தங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்ததாக கூறி மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் ஸ்டேடியத்திலேயே தோனி எப்போது இறங்குவார் என காத்திருந்த ரசிகர்கள் மட்டுமல்லாமல் டிஜே உட்பட ‘காத்திருந்து காத்திருந்து காலங்கள் நோகுதடி… பாடலை ஒலிபரப்பி அந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.
திரு & திருமதி ராஜமௌலி டான்ஸ்!
‘நான் ஈ’ , ‘பாகுபலி’, உள்ளிட்ட படங்களால் இந்தியா முழுக்கவே பிரபலமானார் இயக்குநர் ராஜமௌலி. தொடர்ந்து அவர் இயக்கத்தில் வெளியான ‘ஆர் ஆர் ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு… பாடல் ஆஸ்கர் ஜெயித்த நிலையில் தற்போது உலகப் புகழ் இயக்குநராக இருக்கிறார் ராஜமௌலி. இந்நிலையில் சமீபத்தில் தன் மனைவியுடன் குடும்ப விழா ஒன்றிற்கு வருகை கொடுத்த ராஜமௌலியும், அவரது மனைவி ரமா ராஜமௌலியும் ஒன்றிணைந்து பிரபுதேவா நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், இயக்குநர் ஷங்கரின் ‘காதலன்’ படத்தின் காதலிக்கும் பெண்ணின் கைகள் பாடல் தெலுங்கில் ஒலிக்க இருவரும் இணைந்து ஸ்டைலாக நடனமாடுகிறார்கள். அந்த வீடியோதான் எங்கும் வைரலாகிக் கொண்டிருக்கிறது.