கோவை: பிரதமர் மோடி தமிழக மக்களுக்காக சுற்றி சுழன்று உழைக்கிறார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். நீலகிரி, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி வாக்கு சேகரிக்கிறார். இதில் கோவையில் அண்ணாமலையும், நீலகிரி தொகுதியில்எல்.முருகனும் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடிக்கு தாமரை மாலை அணிவித்து பாஜக நிர்வாகிகள் வரவேற்பு தெரிவித்தனர்.
பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடி தமிழக மக்களுக்காக சுற்றி சுழன்று உழைக்கிறார். ஒரு பறவை போல் பாசமாக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். உலகில் எங்கு சென்றாலும், தமிழ் மொழி குறித்து பிரதமர் பேசுகிறார். அடுத்த 7 நாட்கள் கடுமையாக உழைக்க வேண்டும். 7 நாட்கள் பிரதமருக்காக நாம் அர்ப்பணிப்போம். 5 ஆண்டு நமக்காக பிரதமர் உழைப்பார். மோடியின் வெற்றிக்காக வீடு வீடாக செல்லுங்கள் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, உலகம் போற்றும் உத்தமர் பிரதமர் நரேந்திர மோடி என புகழாரம் சூட்டினார். கடுமையான உழைப்பாளி என்பதால் ஓய்வின்றி நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி மக்களை சந்தித்து வருகிறார். 400 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என தமிழக மக்கள் மோடியை ஆசீர்வதிக்க வேண்டும். தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற வேண்டும். தமிழர்களிடம் அடைக்கலம் தேடி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். தமிழனுக்கு பிறக்காத மறத்தமிழன் பிரதமர் நரேந்திரமோடி என அண்ணாமலை தெரிவித்தார்.