முசிறி: முசிறி அருகே வேளகாநத்தம் பகுதியில் பிரச்சாரத்திற்கு சென்ற ஐஜேகே தலைவர் பாரிவேந்தரை சாதி அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் நாடாளுமன்ற ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் முசிறி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். இரவு 9 அரைமணி அளவில் காமாட்சிபட்டியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு கடைசி இடமான தண்டலை புத்தூர் கிராமத்திற்கு பிரச்சாரத்திற்காக பாரிவேந்தர் புறப்பட்டார்.
அப்போது வேளகாநத்தம் அருகே ஒரு சாதி அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் பாரிவேந்தர் வரும் வழியில் கற்களை வைத்து வழிமறித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பரிவேந்தரின் உதவியாளர்கள் இளைஞர்களிடம் ஏன் எதிர்காக மரிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு பாரிவேந்தர் கடந்த 25ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வதற்காக பெரம்பலூருக்கு மூவானூர், வேங்கைமண்டலம் ஆகிய பகுதிகளிலிருந்து இரண்டு பேருந்துகளில் பொதுமக்களை அழைத்து சென்றதாகவும் அப்போது அம்மா பாளையம் என்ற இடத்தில் பேருந்து விபத்தில் சிக்கியதில் பேருந்தில் 20கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறினர்.
காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் தற்போது வரை அவர்களின் உடல்நலம் குறித்தும் செய்யப்பட்ட மருத்துவ உதவிகள் குறித்தோ பாரிவேந்தர் விசாரிக்காதது ஏன் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பிரச்சார வாகனங்கள் பாரிவேந்தர் வந்த வாகனத்திற்கு பின்னல் அணிவகுத்து நின்றன. வாகனத்தில் விளக்குகளை அணைத்துவிட்டு பாரிவேந்தர் இருட்டில் அமர்ந்திருந்தார். கிராமத்தின் எல்லையில் கர்கள் வைத்து வாலிபர்கள் சாலையை மறுத்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.