கரூர், ஏப். 4: 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மாற்று திறனாளிகள் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று கரூர் நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று (4ம் தேதி) மற்றும் நாளை (5ம் தேதி) ஆகிய இரண்டு நாட்களிலும் விருப்பம் தெரிவித்துள்ள 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் (AVSC) மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் (AVPD) வாக்களிக்க ஏதுவாக, ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அஞ்சல் வாக்குகளை பாதுகாப்புடன் கொண்டு வரும் பொருட்டு தங்கள் பகுதிக்கு வருகை தர உள்ளதால் இதனை பயன்படுத்திக் கொண்டு தகுதியான விருப்பம் தெரிவித்துள்ள வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.