சென்னை: சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதி இடம் பெறாததை எதிர்த்த வழக்கில் ஏப்ரல் 24ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக தேடுதல் குழுவை நியமித்து, தமிழக அரசு கடந்த செப்டம்பர் 13ம் தேதி அரசாணை பிறப்பித்தது.
இந்த குழுவில், பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதி இடம் பெறவில்லை எனக் கூறி, தேடுதல் குழு நியமித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் பி.ஜெகநாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதியையும் சேர்த்து ஆளுநர் நியமித்த தேடுதல் குழுவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு ஏப்ரல் 22ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. எனவே, இந்த வழக்கை ஏப்ரல் 23ம் தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று கோரினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 23ம் தேதி தள்ளிவைத்து, அன்றைய தினம் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.