சென்னை: சென்னை கே.கே.நகர் பாரதிதாசன் காலனி 6வது தெருவை சேர்ந்தவர் கவுசல்யா. இவர் தனது பழைய வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்கான ஒப்பந்தத்தை கட்டிட மேஸ்திரி சந்துரு என்பவர் செய்து வருகிறார். இங்கு, திருவொற்றியூரை சேர்ந்த கொத்தனார் வேல்முருகன் (40) மற்றும் கட்டிட மேஸ்திரி சந்துரு ஆகியோர், கடந்த 29ம் தேதி பணியில் ஈடுபட்டனர். எம்.ஜி.ஆர் நகர் சூளை பள்ளம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மனைவி சரண்யா (30), சித்தாள் வேலை செய்துள்ளார். மாலையில், பணி முடிந்த பிறகு கொத்தனார் வேல்முருகன், சரண்யாவிடம் தன்னுடன் நெருக்கமாக இருக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
அவரை எச்சரித்த சரண்யா, வெளியே சென்று கத்திவிடுவேன், என்று வேல்முருகனை மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த வேல்முருகன், அருகில் இருந்த சுத்தியலை எடுத்து சரண்யாவின் பின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் சரண்யா ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே வேல்முருகன் அங்கிருந்து ஒன்றும் தெரியாதப்படி தப்பி ஓடிவிட்டார். பிறகு வீட்டின் உரிமையாளர் வீட்டை சுற்றி பார்க்க வந்த போது, சரண்யா ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவரது அருகில் ரத்த கரையுடன் சுத்தி ஒன்றும் கிடந்தது.
அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து எம்.ஜி.ஆர்.நகர் போலீசார் வழக்கு பதிந்து, தப்பி ஓடிய கொத்தனார் வேல்முருகனை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இதற்கிடையே சரண்யா நேற்று அதிகாலை மருத்துவமனையில் உயிரிழந்தார். அதேநேரம் போலீசார் கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி, தலைமறைவாக இருந்து வந்த கொத்தனார் வேல்முருகனை தீவிர தேடலுக்கு பிறகு திருப்பூரில் அதிடியாக கைது செய்தனர்.