நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தக்கலை ஊராட்சி ஒன்றியம் மற்றும் பத்மநாபபுரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் தக்கலை பேருந்து நிலையத்தில் வாக்களிப்பது குறித்த கல்லூரி மாணவ மாணவர்களால் வரையப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு சுவரோவியத்தினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், தேர்தல் கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு முன்னிலையில் நேரில் பார்வையிட்டு, பரிசுகள் வழங்கி கூறியதாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுவதையொட்டி 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், 18 வயது நிரம்பிய முதல் இளம் வாக்காளர்கள் உள்ளிட்ட அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் தக்கலை பேருந்து நிலைய வளாகத்தில் கல்லூரி மாணவ மாணவியர்களால் வாக்குரிமை பெற்ற அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிறப்பாக வரையப்பட்ட சுவரோவியத்தினை நேரில் பார்வையிட்டதோடு, கலந்து கொண்ட அனைத்து முதல் வாக்காளர்களை பாராட்டியத்தோடு, அவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தபட்டது.
மேலும் 18 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட முதல் வாக்காளர்கள் தங்களுடைய ஜனநாயக கடமையினை ஆற்றிடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்டத்திற்குட்பட்ட கல்லூரிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இன்றைய நிகழ்வில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வாக்களிப்பது நம் அனைவருடைய உரிமை, கடமை, ஒற்றுமை வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு ஒட்டுவில்லை ஒட்டப்பட்டதோடு, பேருந்து பயணம் செய்த பயனாளிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையுடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய தமிழ்நாடு ஊரக வாழ்வாதாரம், மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நகர்புற நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் மாற்றுத்திறனாளித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் பாராட்டுகிறேன். எனவே வாக்காளர்கள் அனைவரும் ஏப்ரல் 19 அன்று வாக்குச்சாவடிக்கு சென்று தங்கள் ஜனநாயக கடமையினை நிறைவேற்றி, 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். பத்மநாபபுரம் நகராட்சி ஆணையர் லெனின், தக்கலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சுங்கான் கடை ஐயப்பா கலை மற்றம் அறிவியல் கல்லூரி, நூருல் இஸ்லாம் கல்லூரி, மார்த்தாண்டம் நேசமணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவட்டார் எக்ஸ்சல் பள்ளி மாணவ மாணவியர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.