Sunday, October 6, 2024
Home » மிளகாய் சாகுபடியில் அசத்தல் வருமானம்!

மிளகாய் சாகுபடியில் அசத்தல் வருமானம்!

by Porselvi

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தாலுக்கா, அரப்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவர் தனக்குச் சொந்தமான குறைந்த அளவு நிலத்தில் மிளகாய், நிலக்கடலை, நெல் போன்ற பயிர்களைப் பயிரிடுவதோடு, கால்நடைகளையும் வளர்த்து ஒருங்கிணைந்த பண்ணையம் நடத்தி வருகிறார். இதன்மூலம் நல்ல வருமானமும் பார்த்து வருகிறார். ஒரு காலைப்பொழுதில் ரங்கநாதனைச் சந்தித்தோம். “எஸ்எஸ்எல்சி வரை படித்திருக்கிறேன். பள்ளியில் படிக்கும்போதே மாலையில் வீட்டுக்கு வந்தவுடன் அப்பாவுக்கு துணையாக தோட்டத்திற்கு சென்று களை எடுப்பது, தண்ணீர் பாய்ச்சுவது போன்ற பணிகளை செய்வேன். அப்பாவுக்கு உடல்நிலை முடியாமல் போகவே, விவசாய வேலைகளை நானே முழுமையாக பார்க்கத் தொடங்கி விட்டேன். எங்களுக்குச் சொந்தமாக ஒன்றரை ஏக்கர் நிலம் இருக்கிறது. அருகில் இருக்கும் 50 சென்ட் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து மொத்தம் இரண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன்.

இரண்டு ஏக்கர் நிலத்தில் 60 சென்டில் கடலை, 20 சென்டில் மிளகாய், 1 ஏக்கரில் நெல் ஆகியவற்றைப் பயிரிட்டு இருக்கிறேன். இதில் எனக்கு அதிக மகசூல் கொடுக்கும் பயிர் என்றால் அது மிளகாய்தான். குறைந்த இடத்தில் பயிரிட்டாலும் நிறைவான மகசூல் கிடைக்கிறது. நான் இங்கு நாட்டு ரக மிளகாயைப் பயிரிட்டு இருக்கிறேன். 20 சென்ட் நிலத்தில் மிளகாய் பயிரிடுவதற்கு 7 முடிச்சு வரை நாற்றுகள் தேவைப்படும். ஒரு முடிச்சில் 100 நாற்றுகள் இருக்கும். எங்கள் நிலத்திற்கு தேவையான நாற்றுகளை நாங்களே பதியம் போட்டு நடவு செய்கிறோம். இதற்கு முன்பு பொன்னி நெல்லைப் பயிரிட்டிருந்தேன். செம்மண், மணல் கலந்த நிலம் என்பதால் நெற்பயிரை அறுவடை செய்தபோது மண் மீண்டும் பொலபொலவென்று மாறிவிட்டது. இதனால் டிராக்டரை வைத்து மூன்று முறை மட்டுமே உழவு ஓட்டினேன். முதல் உழவினை மடக்கி உழுதேன். இதனால் ஏற்கனவே அறுவடை செய்த நெற்பயிரின் வேர்கள் நிலத்திற்கு உரமாக பயன்படும். இரண்டாம் உழவின்போது தண்ணீர் அதிகம் விட்டு நிலத்தினை நன்கு ஈரப்படுத்தினேன். மூன்றாம் உழவின்போது 4 மூட்டை மக்கிய எரு தொழுவுரத்தைப் போட்டோம்.

ஏற்கனவே பதியம் போட்டு வைத்திருந்த நாற்றுகளை எடுத்து நிலத்தில் 7 செ.மீ அளவிற்கு குழி தோண்டி நடவு செய்தேன். நாற்றுகளை நடவு செய்த 5வது நாளில் செடிகள் நன்கு வேர்பிடித்து வளரத் தொடங்கிவிடும். இதிலிருந்து 10வது நாளில் முதல் களை எடுப்போம். களையை இயந்திரங்கள் கொண்டு எடுக்காமல் ஆட்களைக் கொண்டு எடுப்பது நல்லது. அப்போதுதான் செடிகளில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. செம்மண் பூமி என்பதால் அதிக களை வளரும். அதனால் 10 நாட்களுக்கு ஒருமுறை களை எடுப்பது மிகவும் அவசியம். களை எடுக்க தவறினால் மிளகாய்ச் செடிகளின் வளர்ச்சி தடைபடும். இதுபோக பூச்சிகளின் தாக்குதல் அதிகமாகும். களை எடுக்கும்போது தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. மிளகாய் சூடான பகுதிகளிலும் வளரும் தன்மை கொண்டது என்பதால் அதிக தண்ணீர் தேவைப்படாது.

மிளகாய்ச் செடிகளில் களை அதிகமாக வளர்வதால் பூச்சிகள் தொல்லை இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த ஐந்திலைக் கரைசலை பயன்படுத்துவோம். இந்தக் கரைசல் நாங்களே வேம்பு, புங்கன், எருக்கன், ஆடாதொடா, நொச்சி ஆகிய இலைகளை மாட்டுக் கோமியத்தில் மூன்று வாரம் ஊற வைத்து தயார் செய்கிறோம். புழுக்கள், பூச்சிகள் இருக்கும் இடத்தில் ஐந்திலை கரைசலைத் தெளிப்போம். இதன்மூலம் பூச்சிகள் உடனே கட்டுக்குள் வரும். நாட்டு ரக மிளகாய்ச் செடியில் 5வது களை எடுக்கும்போது பூக்கள் வரத் தொடங்கிவிடும். பூக்கள் வந்த 5வது நாளில் மிளகாய் வரத் தொடங்கிவிடும். பச்சை மிளகாய் முழுவதும் சிவப்பாக மாறும் நேரத்தில் அறுவடை செய்வோம். ஒரு அறுவடையில் 1 மூட்டை மிளகாய் மகசூலாக கிடைக்கும். இந்தப் பகுதியில் ஒரு மூட்டை என்பது 60 கிலோ எடை கொண்டது.

அறுவடை செய்யும் மிளகாயை சந்தையில் நானே நேரடியாக விற்பனை செய்கிறேன். சீசனைப் பொருத்து ஒரு கிலோ காய்ந்த மிளகாய் ரூ.500க்கு கூட விற்பனையாகும். ஒரு கிலோ மிளகாய் சராசரியாக ரூ.400 என்ற கணக்கில் சந்தையில் விற்பனை செய்கிறேன். மாதம் இரண்டு முறை அறுவடை செய்வோம். இதன்மூலம் ஒரு மாதத்திற்கு சராசரியாக 120 கிலோ காய்ந்த மிளகாய் கிடைக்கும். மிளகாயில் மாத வருமானமாக ரூ.48 ஆயிரம் கிடைக்கிறது. இதில் செலவுகள் ரூ.8 ஆயிரம் போக ரூ.40 ஆயிரம் லாபமாக கிடைக்கிறது. குறைந்த பட்சம் 90 நாட்கள் வரை மிளகாய் மகசூல் கிடைக்கும். மிளகாய்ச் செடியின் ஆயுட்கால முடிவு நெருங்கும்போது அடுத்த பதியத்தை தயார் செய்துவிடுவேன்.

இதுபோக 60 சென்ட் நிலத்தில் ஜி7 நிலக்கடலை பயிரிட்டிருக்கிறேன். 60 சென்ட் நிலத்திற்கு 10 கிலோ விதை தேவைப்படும். ஏற்கனவே எடுத்து வைத்திருந்த விதையை நடவுக்கு பயன்படுத்திக் கொண்டேன். வேர்க்கடலையைப் பொருத்தவரையில் அனைத்து மண்ணிலும் வளரக்கூடிய பக்குவம் கொண்டது. விதைப்பதற்கு முன்பு மண்ணில் கட்டிகள் இல்லாமலும், இறுக்கம் இல்லாமலும் தயார் செய்து கொள்வோம். பிறகு 4வது உழவின்போது ஒரு ஏக்கருக்கு 5 டன் தொழுஉரம் இடுவோம். மண்ணின் பக்குவத்தைப் பார்த்துவிட்டு கடைசி உழவின்போது 15 கிலோ டிஏபி, 10 கிலோ பொட்டாசியம் இடுவோம். இதனையடுத்து ஒவ்வொரு வரிசைக்கும் இடையில் அதிகபட்சமாக 30 சென்டி மீட்டர் இடைவெளியும், ஒரு வரிசையில் ஒவ்வொரு செடிக்கும் இடையில் 10 சென்டி மீட்டர் இடைவெளியும் விட்டு நடவு செய்வோம். இதனால் அதிகமான வேர்க்கடலைகள் கிடைப்பதோடு, தரமான பருப்பாகவும் இருக்கும். பின்னர் வாரம் ஒருமுறை சீரான வகையில் தண்ணீர் விடுவோம்.

வேர்க்கடலைக்கு அதிக பராமரிப்பு தேவைப்படாது. பூச்சிகளின் தொல்லை அதிகம் இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த வயல்களின் வரப்பில் ஆமணக்குச் செடிகளை நடவு செய்வோம். இதில் பூச்சிகள் வந்தால், வேர்க்கடலைச் செடிகளுக்கு ஐந்திலைக் கரைசலைத் தெளிப்போம். இதன்மூலம் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். மாதம் ஒருமுறை செடிகளில் களை எடுப்போம். இரண்டாவது களை எடுக்கும்போது 50 கிலோ அளவிற்கு ஜிப்சம் கொடுப்போம். 110வது நாளில் செடிகளில் உள்ள இலைகள் பழுத்து கொட்டும். இந்தத் தருணத்தில் நிலக்கடலை அறுவடைக்கு தயாராகிவிடும். 60 சென்ட் நிலத்தில் இருந்து சராசரியாக 5 மூட்டை வேர்க்கடலை கிடைக்கும். தோலை உரித்து கடலையாக எடுக்கும்போது இரண்டரை மூட்டை கடலை கிடைக்கும். ஒரு மூட்டை கடலைப்பருப்பை ரூ.9 ஆயிரம் என்ற கணக்கில் விற்பனை செய்கிறேன். இதன்மூலம் ஒரு போகத்திற்கு ரூ.22 ஆயிரம் வருமானமாக கிடைக்கிறது. இதில் செலவுகள் ரூ.3 ஆயிரம் போக ரூ.19 ஆயிரம் லாபமாக எடுக்கிறேன்.

அதேபோல் ஒரு ஏக்கர் நிலத்தில் கோ-51 ரக நெல்லைப் பயிரிட்டு இருக்கிறேன்.இது சிறிய வகை நெற்பயிர். இந்த நெற்பயிரை முதன்முறையாக பயிரிட்டுள்ளேன். அடுத்த மாதம் நெல் அறுவடைக்கு தயாராகிவிடும். இதுபோக 10 நாட்டு பசு மாடுகள் மற்றும் 20 வெள்ளாடு வளர்த்து வருகிறேன். வீட்டிற்கு தேவையான பால் தவிர மீதமுள்ளவற்றை விற்பனை செய்வதால் மாதத்திற்கு ரூ.13 ஆயிரம் வருமானமாக கிடைக்கிறது. பண்டிகைக் காலங்களில் ஆடுகளை அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் விற்பனை செய்வதில் ரூ.30 ஆயிரம் வருமானமாக கிடைக்கிறது. வருடத்திற்கு இரண்டு ஆடுகள் மட்டுமே விற்பனை செய்கிறேன். செடி, கொடிக்கழிவுகளை ஆடு, மாடுகளுக்கு தீவனமாக கொடுத்து வருகிறேன். வெளியில் இருந்து நாங்கள் தீவனம் வாங்குவது கிடையாது. இதனால் எங்களுக்கு தீவனச்செலவு பெருமளவில் மிச்சமாகிறது” என்கிறார் ரங்கநாதன்.
தொடர்புக்கு:
ரங்கநாதன் – 87549 99259

 

You may also like

Leave a Comment

twenty + 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi