டெல்லி : தேர்தல் பத்திர திட்டம் குறித்து விமர்சனம் செய்பவர்கள் விரைவில் வருத்தப்படுவார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள பிரதமர் மோடியிடம் 2018ல் அறிமுகமான தேர்தல் பத்திர திட்டத்தை அரசியல் அமைப்புக்கு எதிரானது என்று கூறி கடந்த மார்ச் 15ம் தேதி உச்சநீதிமன்றம் ரத்து செய்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த பிரதமர் மோடி, 2014க்கு முன்னர் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கப்பட்டது குறித்த தகவல்கள் இல்லை என்பதால் தேர்தல் பத்திரங்களை தாம் அறிமுகப்படுத்தியதாக அவர் கூறினார்.
ஆனால் தற்போது நன்கொடையின் நிதி ஆதாரத்தை கண்டுபிடிக்க முடியும் என்பதால் தேர்தல் பத்திரம் திட்டத்திற்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்றார். எந்த திட்டமும் முழுமையானது அல்ல என்று பேட்டி அளித்துள்ள பிரதமர் மோடி, தேர்தல் பத்திர திட்டத்தில் உள்ள குறைபாடுகள் விரைவில் களையப்படும் என்றார். இப்பொது தேர்தல் பத்திரங்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவோர் விமர்சனம் செய்வோர் விரைவில் வருத்தப்படுவார்கள் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.