ஓசூர்: ஜிஎஸ்டி வரியை விதித்த ஒன்றிய அரசால் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தடாலடி கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராம் நகர் அண்ணா சிலை அருகில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, நேற்று அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: இந்த கூட்டணி சாதாரண கூட்டணி இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் என்ற ஒரு ராசியான வெற்றி கூட்டணி. கேப்டன் மறைவுக்கு பிறகு எங்குமே வராமல் இருந்தேன். எடப்பாடியார் கேட்டுக்கொண்டதால், அவருடைய வார்த்தைக்கு மரியாதை கொடுத்து, இன்றைக்கு உங்களிடத்தில் வாக்கு சேகரிக்க வந்துள்ளேன்.
ஜிஎஸ்டி என்ற ஒரு வரியை விதித்த ஒன்றிய அரசால் இங்கிருக்கும் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுகுறு வியாபாரிகள், கடைக்காரர்கள் எல்லாருமே ஜிஎஸ்டியால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பெட்ரோல், டீசல் விலை உயர்வு, காஸ் சிலிண்டர் விலை உயர்வு என அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. ஓசூரில் ரோஜா மலர்கள் விற்பனை அதிகம். உலகம் முழுவதிற்கும் ஓசூரில் இருந்து தான் மலர்களை ஏற்றுமதி செய்கிறார்கள். இங்கு மிகப்பெரிய ஒரு விற்பனை சந்தையை உருவாக்குவோம். ஓசூரில் மாம்பழக் கூழ் தயாரிக்கும் ஆலையை உருவாக்குவோம். கெலவரப்பள்ளி அணையில் கழிவுநீர் கலப்பதை உடனடியாக தடுத்து, மக்களுக்கு நிலத்தடி நீர் மாசடைவதை தடுப்போம்.அதிமுகவுடன் இணைந்து, நிச்சயமாக மேகதாது அணை கட்ட விடாமல் தடுப்போம். இவ்வாறு அவர் பேசினார்.